”முதலிரவு தினத்திலேயே சந்தேகம்’ - விரிவுரையாளர் டார்ச்சரால் ஒரே வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்!

0 63597
தற்கொலை செய்துகொண்ட சந்திரலேகா மற்றும் கணவன் பாலாஜி

முதல் இரவின்போதே மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுக் கொடுமைப்படுத்தியதால், திருமணமான ஒரு வாரத்துக்குள் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வேலுரில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ரெட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரலேகா. இவருக்கும் காட்பாடி அருகே உள்ள பிரம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் கடந்த மாதம் ஆகஸ்ட் 23 - ம் தேதி திருமணம் நடைபெற்றது. பாலாஜி, சேலம் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 30 - ம் தேதி குளியலறையில் சந்திரலேகா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரலேகாவின் குடும்பத்தின் காவல் நிலையத்தில் புகார் அளித்தனன் பேரில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில், சந்திரலேகாவின் அறையில் அவரது பெற்றோர் சோதனை மேற்கொண்ட போது சந்திரலேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், “எனது கணவர் பாலாஜி முதலிரவு அன்றே என்மீது சந்தேகப்பட்டார்.. நீ இவ்ளோ அழகா இருக்கியே உன்னை யாரும் இதுவரை காதலித்ததில்லையா, நீ யாரையாவது காதலித்து இருக்காயா, என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார். என்னை விட்டுவிட்டு காதலித்த பையன்கூட ஓடி விடுவாயா என்று கேட்கிறார். அசிங்கமாகப் பேசி ஒவ்வொரு நாளும் என்னைக் கொடுமைப் படுத்துகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் கூட,  திருமணத்துக்கு முன்பான வாழ்க்கையை சந்தேகப்படுகிறார். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் இவரோடு என்னால் வாழ முடியாது. நான் சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டேன். ஆனால், நான் நினைத்தபடி எனது திருமண வாழ்க்கை அமையவில்லை. அதனால் நான் உங்களை விட்டுப் பிரிகிறேன். தங்கைகளுக்காகவாவது நல்ல மாப்பிள்ளையைப் பாருங்கள்” என்று கைப்பட எழுதியுள்ளார் சந்திரலேகா.

திருமணமான ஒரு வாரத்திலேயே புதுப்பெண் சந்தேகம் தாங்கமுடியாமல், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments